சதாசிவ மூர்த்தி
| சிவ வடிவங்களில் ஒன்றான | |
| சதாசிவ மூர்த்தி | |
சதாசிவம் | |
| மூர்த்த வகை: | மகேசுவர மூர்த்தம், உருவத்திருமேனி |
| இடம்: | கைலாயம் |
| வாகனம்: | நந்தி தேவர் |

(10ஆம் நூற்.)
சதாசிவம், தென்னகச் சிவநெறியின் பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவன் வடிவமாகும்.[1] தூயவெண்ணிறத்துடன், ஐந்து திருமுகங்களும், பத்துக் கரங்களும், பதினைந்து திருக்கண்களும் கொண்டு, பதினாறு வயது இளைஞனாகக் காட்சியருளும் சதாசிவனைத் தியானிக்குமாறு, ஆகமங்கள் கூறுகின்றன.
சிவத்திருக்கோலம்
உத்தர காமிகத்தின் படி, வலக்கையில் சூலமும், மழுவும், கட்வாங்கமும், வச்சிரமும், அபயமுத்திரையும் கொண்டும், இடக்கையில் நாகம், மதுலிங்கப்பழம், நீலோற்பலம், உடுக்கை, மணிமாலை, கொண்டும் காட்சியளிக்கிறார். இந்த மூர்த்தி ஈசானம், தற்புருடம், வாமம், அகோரம், சத்தியோசாதம் முதலான ஐந்து திருமுகங்களுடன் எழுந்தருளியிருப்பவர். இவரது தேவியாக அமர்ந்திருக்கும் சக்திக்கு, மனோன்மணி என்று பெயர்.
சதாசிவ வடிவமானது, அறுபத்துநான்கு சிவத்திருக்கோலங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.சிவலிங்கம் சதாசிவனின் வடிவம் என்று சொல்லப்படுகின்றது. இலிங்கத்திருவுருவை வழிபடினும், சதாசிவனை வழிபட்ட பலன் கிடைக்கும்.
சதாசிவனின் திருமுகங்கள்
ஐந்தொழிலை ஆற்றுகின்ற பரம்பொருளின் அதியுச்ச வடிவமாகக் கருதப்படும், சதாசிவமே, ஈசனின் திருப்பெருவடிவமாகக் கருதப்படுகின்றார். இம்மூர்த்தி, தன் ஐந்து திருமுகங்கள் மூலமே ஐந்தொழிலை நிகழ்த்துவதாக ஆகமநூல்கள் கூறுகின்றன. அவற்றின் சுருக்கம் வருமாறு:
| இயல்பு | ஈசானம் | தத்புருடம் | வாமதேவம் | சத்தியோசாதம் | அகோரம் | |
|---|---|---|---|---|---|---|
| திக்கு | மேல் | கிழக்கு | வடக்கு | மேற்கு | தெற்கு | |
| நிறம் | பளிங்கு | பொன்மஞ்சள் | சிவப்பு | வெண்மை | நீலம் | |
| ஐம்பூதங்கள் | ஆகாயம் | காற்று | நீர் | பூமி | நெருப்பு | |
| ஐந்தொழில்கள் | அருளல் | மறைத்தல் | காத்தல் | படைத்தல் | அழித்தல் | |
| திருமுகம் | சதாசிவம் | மகேசுவரன் | விஷ்ணு | பிரம்மா | உருத்திரன் | |
| மானிட உடலில் | ஆக்கினேயம் | விசுத்தி | மணிப்பூரகம் | சுவாதிஸ்டானம் | அனாகதம் | |
| சைவநூல்கள் | சித்தாந்தம் | காருடம் | வாமம் | பூதம் | பைரவம் | |
| அருளியவை | மந்திரமார்க்க நூல்கள் | ஆதிமார்க்க நூல்கள் | வைதிகம் | இலௌகீகம் | அத்யாத்மிகம் (சாங்கியம், யோகம் முதலானவை) | |
| சிவாகமங்கள் | புரோற்கீதம் முதல் வாதுளம் வரை எட்டு, அகத்தியருக்கு | ரௌரவம் முதல் முகவிம்பம் வரை ஐந்து, கௌதமருக்கு | தீர்த்தம் முதல் சுப்ரபேதம் வரை ஐந்து, காசிபருக்கு | காமிகம் முதல் அசிதம் வரை ஐந்து கௌசிகருக்கு | விசயம் முதல் வீரம் வரை ஐந்து, பரத்துவாசருக்கு |